flipkart discount sale search here.

Thursday 11 January 2018

கண்ணீர் வரவழைக்கும் கவிதை....

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து

வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,

தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,

இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,

முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்

களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து

ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்

போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே

கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்

அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்

வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,

வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,
நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான்

வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,

கடன்காரன் வாசலிலே
கத்திவிட்டு போகையிலே

வழியின்றி நிற்கையிலே
கண்ணில் படும் காளை மாடு,

கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக

மரணவலி கொண்டிடுவான்
மானமுள்ள உழவன் மகன்

இருப்பதெல்லாம் போனாலும்,
உழவையவன் விடுவதில்லை.,

காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ....

பட்டமுந்தான் வந்தபின்னும்
பருவமழை பொய்க்கையிலே
போக்கத்தை  வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,

தண்ணி பாத்து நாளான வெடிச்சு
நிக்கும் மண்ணை பாத்து,
கண்ணீரைச் சிந்தியவன் கடைசியாக
கடன் கேட்டு,

நாலு முல கயிறு வாங்கி
நிக்க வச்ச கலப்பையிலே
தலைப்பாகம் பாத்துக்கட்டி
நாண்டுகிட்டு செத்துருவான் ....

அனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,

சேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல ...

கொடுக்கும் 2 இலட்சம் போயி
வங்கியிலே வட்டி தரும்,
ஏர்க்கலப்பையில் மாட்டை
பூட்டி உழுதிடுமா??? 

அழிஞ்சு போகும் இனமுன்னு சில
விலங்குகளை பாதுகாக்க,
கோடிக்கணக்கில் செலவு பண்ணி
சரணாலயம் இருக்குதுங்க ...

அழிஞ்சு போற எம் உழவன்
இனம் யாருக்கும் தெரியலயா?? ...

பணம் மாத்த காத்துநிக்கும்
கோடிமக்கள் ஒருநாள்,

சோத்துக்காக உழவன் வீட்டில்
காத்து நிக்கும் நாள் வரனும் ...

*எழுதியவர்களுக்கு நன்றிகள்*

No comments:

Post a Comment