flipkart discount sale search here.

Thursday 30 November 2017

இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...

*அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது*

நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
நீ நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய்.

நான் பல் துலக்குகிறேன்
நீ பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய்.

நான் செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன்.
நீ வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய்.

நான் உடலை சுத்தம் செய்கிறேன்.
நீ ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய்.

நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
நீ பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய்.

நான் அலுவலகம் கிளம்புகிறேன்.
நீ பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு
என்முறைக்காக காத்திருக்கிறாய்.

நான் இரவு வீடு திரும்புகிறேன்.
நீ இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து.

நான் தூங்கச்செல்கிறேன்.
நீ கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய்.

ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
உனக்கு?

உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் நீ!

கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் நீ!

சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி நீ!

எங்களின் பிரதிநிதியாக
கோவில்களிலும் நீ!

என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
" நான் வேலைச்செய்கிறேன்''
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..

புள்ளிவிபரம் சேகரிக்க வந்த
அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
" வேலைப் பார்க்கிறீர்களாமா?"
உன் பதில்..
" இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்..."..........

*மனைவியை நேசிப்போம், ஒரு  விதத்தில் அவளும் நம் தாய் தான்..*

No comments:

Post a Comment